உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற போது மட்டுமல்ல சட்டமன்றத்தில் உறுப்பினராக பொறுப்பேற்ற போதும் விமர்சனங்கள் வந்தது. அதற்கு தன் செயல்பாடுகள் மூலம் பதிலளித்தவர் உதயநிதி என முதலமைச்சர் பாராட்டினார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி மாவட்டம், அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாட்டில் தொழில் துறை வளர்ந்து வருகிறது. புதிய முதலீடுகளை ஈர்த்து வருகிறோம். மக்களை தேடி மருத்துவம் மூலம் ஒரு கோடி மக்கள் பயன்பெற்றுள்ளார்கள். இது மாரத்தான் போல நெடும் ஓட்டத்தால் விளைத்த பயன்.
உதயநிதியை பாராட்டிய முதலமைச்சர்
உதயநிதி அமைச்சரவைக்கு தான் புதியவர் உங்களுக்கு அல்ல. அவர் அமைச்சராக
பொறுப்பேற்ற போது மட்டுமல்ல, சட்டமன்றத்தில் உறுப்பினராக பொறுப்பேற்ற போதும்
விமர்சனங்கள் வந்தது. அதற்கு தன் செயல்பாடுகள் மூலம் பதிலளித்தார். உதயநிதிக்கு பல முக்கிய துறைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை சிறப்பாக நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
மகளிருக்கான நலத்திட்டங்கள்
தமிழக மக்களின் மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
மகளிருக்கு சொத்துரிமை, இட ஒதுக்கீடு, சுய உதவிக்குழு கடனுதவி உள்ளிட்ட
பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி. அந்த வகையில் தற்போதும்
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், உயர் கல்வி உதவி தொகை, மகளிர் சுய
உதவிக்குழுக்களுக்கு கடனுதவி போன்ற பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி
வருகிறோம்.
கடந்த கால ஆட்சியாளர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன்கள் வழங்குவதை
சரியாக செய்யவில்லை. தி.மு.க அரசு மீண்டும் அமைந்தவுடன் அதை முறையாக
செயல்படுத்தி வருகிறோம். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மக்களின் நிறுவனமாக ஜனநாயக முறையில் செயல்படுகிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 2021-2022 ஆம் நிதியாண்டில் 20 ஆயிரம் கோடி
வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்தோம் ஆனால் அதைவிட அதிகமாக 21 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கினோம்.
மணிமேகலை விருது
2022-2023 நிதியாண்டில் 25 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 16.12.22 வரை 16 ஆயிரம் கோடிக்கு அதிகமாக கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. மகளிரின் மேம்பாட்டை கடமையாகவும், பொறுப்பாகவும் நினைக்கிறோம். 2007ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் சிறப்பாக பணியாற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட தொடங்கியது. அது கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டு மீண்டும் தற்போது தி.மு.க அரசு அமைந்தவுடன் வழங்கப்படுகிறது.
தன்னிறைவு..
தமிழ்நாட்டில் கடைக்கோடி கிராமங்கள் வசிக்கும் பெண்கள் கூட தன்னிறைவு
பெற்றுள்ளனர். நாட்டின் முன்னேற்றம் என்பதை அந்த நாட்டில் வசிக்கும் பெண்களின் நிலையை அறிந்தால் தெரிந்து விடும். தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்கு
எண்ணற்ற திட்டங்களை செய்து வருகிறோம்.
திராவிட மாடல் கொள்கை
தமிழர்களையும், தமிழ்நாட்டையும் செழிக்க வைப்பது தான் திராவிட மாடலின் கொள்கை.
திராவிட மாடல் கொள்கையிலிருந்து சிறிதும் வழுவாமல் நடந்து வருகிறோம். கால நிலை மாற்றத்திற்கான கொள்கையை வரையறுப்பதில் இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு அரசு உள்ளது. எவ்வளவு மழை, வெள்ளம் வந்தாலும் அதை தாங்கும் அளவிற்கு உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி உள்ளோம். யாரும் பாராட்ட வேண்டும் என நாங்கள் பணியாற்றவில்லை மக்களை காக்க தான் பணியாற்றுகிறோம்.
மக்கள் பணி
கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 8549 கி.மீ பயணம் செய்துள்ளேன். 647 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். அதில் 561 அரசு நிகழ்ச்சிகள். இதன் மூலம் 1 கோடிக்கும் அதிகமான நபர்களுக்கு நேரடியாக நலத்திட்ட உதவிகள் சென்று சேர்ந்துள்ளது. என்னுடைய மக்கள் பணி நிற்கவே நிற்காது.
நம்பர் ஒன் முதலமைச்சராக இருந்தாலும் சரி, நம்பர் ஒன் மாநிலமாக இருந்தாலும் சரி
அதன் வெளிப்பாடு என்பது ஏழைகளின் சிரிப்பும், மகளிரின் மகிழ்ச்சியும் தான்.
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றார் அண்ணா. ஏழைகளின் சிரிப்பில்
அண்ணாவையும், கலைஞரையும் காணலாம் என்பது தான் என் கொள்கை. அதன்படி
செயல்படுகிறோம்.
மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின்
சுய உதவி குழுக்களை தொடர்ந்து மேம்படுத்திட வேண்டும் என வேண்டுகோளாக
வைக்கிறேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், தங்கம்
தென்னரசு, மா.சுப்ரமணியன், மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்களவை
உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி
சிவா மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.