சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் உயர்த்துவது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. எதிர்காலத்தில் இது போல பிரச்சனைகள் எழாமல் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
ஆம்னி பேருந்துகளில் பல்வேறு வகைகள் இருப்பதால் பல்வேறு வகைகளில் கட்டணம் வசூலிப்பதாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். பண்டிகை காலங்களில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டணம் வசூலிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தி உள்ள நிலையிலும் அரசு பேருந்தின் கட்டணத்தை உயர்த்தாமல் இயக்கி வருகிறோம். அரசு பேருந்து கட்டணத்தை ஒப்பிட்டு அதை பார்ப்பது தவறு. அவர்கள் தொழில் சார்ந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் கலந்து பேசி இது தொடர்பாக தீர்வு சொல்வதாக தெரிவித்து இருக்கிறார்கள்.
மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்த்தால் எழை, எளிய மக்கள் பாதிக்காத வகையில் குறைந்த அளவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு 1400 ஆம்னி பேருந்துகள் தான் இயங்குகிறது. கட்டணத்தை தெரிந்தே தான் பேருந்துகளை முன்பதிவு செய்து பயணிக்கிறார்கள். கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை பாதிப்பதில்லை. ஆம்னி பேருந்துகள் சேவையின் அடிப்படையில் இயங்க முடியாது. அவர்களுக்கும் பாதிப்பு வராத வகையில் தான் கட்டண நிர்ணயம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.







