அமலாக்கத்துறை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அமைச்சர் பொன்முடி அதிகாலை 3 மணி அளவில் வீடு திரும்பினார்.
தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். .சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலணியில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை 7 மணி முதல் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோல கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினரும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதம் சிகாமணியின் வீடு மற்றும் அவர் நடத்தி வரும் பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
கடந்த 2006 -2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இந்த காலத்தில் அவர் தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு சட்டவிரோதமாக செம்மண் குவாரிகளை ஒதுக்கியதாகவும், தனது மகன் கௌதம சிகாமணிக்கு 2 குவாரிகளை ஒதுக்கியதாகவும் புகார் எழுந்தது. இதன்மூலம் அரசுக்கு ரூ.28 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டை முன்வைத்தது. இதனை அடிப்படையாக கொண்டு சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இரவு 8 மணிக்கு வரை சோதனை நடைபெற்ற நிலையில் நான்கு பைகளில் இருந்து ஆவணங்களை அமலாக்கதுறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.பின்னர் பொன்முடி சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அவரது காரிலேயே அழைத்து சென்றனர்.
இந்த விசாரணை நள்ளிரவு சுமார் 3 மணி வரை நீடித்தது. பின்னர் அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக், அமைச்சர் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை என்று தெரிவித்தார்.






