தஞ்சை தேர் விபத்தில் பள்ளி மாணவர் மரணமடைந்தது தொடர்பாக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கண்கலங்கியபடி உருக்கமாக பேசினார்.
சட்டப்பேரவையில் களிமேடு விபத்து தொடர்பாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், அதிகாலை 3 மணிக்கு விபத்து நடந்திருந்தாலும், காலை 5 மணிக்கே தன்னை முதலமைச்சர் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவித்தார். மேலும், அதிகாலையிலேயே தொடர்பு கொள்ளும் வகையில், அதிகாரிகளுக்கு எத்தகைய சுதந்திரத்தை முதலமைச்சர் வழங்கியுள்ளார் என்பதை இதன்மூலம் உணர முடிகிறது என சுட்டிக்காட்டினார்.
11 மாதங்களாக பல மாணவர்களுக்கு மாலைகளை சூட்டி வந்த தாம், உயிரிழந்த 8ஆம் வகுப்பு மாணவனின் சடலத்துக்கு மாலை அணிவித்தேன் என கூறியபோது கண்கலங்கினார். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று ஆறுதல் கூறினால் தான், தன்னை தானே தேற்றிக்கொள்ள முடியும் என்று முதலமைச்சர் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
அண்மைச் செய்தி: பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனின் பேச்சால் பேரவையில் சலசலப்பு
அதேபோல, சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்தில் 13 துணை மின் நிலையங்கள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின் 2021-2022, 2022-2023-ம் ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 316 துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், திருவாரூர் உள்ளிட்ட 3 கோயில்கள் உள்ள இடங்களில் தேரோட்டம் நடைபெற ஏதுவாக புதைவட மின்கம்பிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







