அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) சத்ய நாதெல்லா ‘பத்ம பூஷன்’விருதைப் பெற்றுள்ளார்.
இந்தியாவில் உள்நாட்டு வளர்ச்சியை மேம்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வகிக்கும் முக்கியப் பங்கு குறித்து விவாதிப்பதற்காக, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதர் டி.வி. நாகேந்திர பிரசாத்தை சத்ய நாதெல்லா சந்தித்தார். இந்த சந்திப்பு இந்தியாவின் வளர்ச்சிப் பாதை மற்றும் உலகளாவிய அரசியல் மற்றும் தொழில்நுட்பத் தலைவராக இருப்பதற்கான நாட்டின் சாத்தியக்கூறுகள் குறித்து நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகனுக்கான விருதாக கருதப்படும் ’பத்ம பூஷன்’ விருதையும், டி.வி. நாகேந்திர பிரசாத்திடமிருந்து, நாதெல்லா முறைப்படி பெற்றார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ’பத்ம பூஷன்’ விருது பெற்ற 17 பேரில் நாதெல்லாவும் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
பிரசாத் உடனான சந்திப்பிற்குப் பின், “நாம் ஒரு வரலாற்று பொருளாதார, சமூக மற்றும் தொழில்நுட்ப மாற்றத்தின் காலகட்டத்தில் வாழ்கிறோம். அடுத்த பத்தாண்டுகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் வரையறுக்கப்படும். இந்தியத் தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் தொழில்நுட்பத்தின் பக்கம் திரும்புகின்றன.
பத்ம பூஷன் விருதைப் பெறுவதும், பல அசாதாரண மனிதர்களுடன் அங்கீகாரம் பெற்றதும் பெருமையாக இருக்கிறது. குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் இந்திய மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்திய மக்களுடன் தொடர்ந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். சாதனை படைக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்” என்று நாதெல்லா கூறினார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.