கோவை வழியாக இயக்கப்பட்ட மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் மூலம் 2 1/2 மாதங்களில் 80 லட்சம் ரூபாய் வருமானம் பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் தொடர்ந்து இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி வழியாக திருநெல்வேலிக்கு இயக்கப்பட்ட மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் மூலம் 2 1/2 மாதங்களில் 80 லட்சம் ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது. திருநெல்வேலியில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளைக் கொண்டு இந்த சிறப்பு ரயில் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதால் இந்த மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த ஏப்ரல் 21 முதல் ஜூன் 27 வரை வியாழக்கிழமைதோறும் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம், வெள்ளிக்கிழமை தோறும் மேட்டுப்பாளையம் திருநெல்வேலி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம், தென்காசி, அம்பை வழியாக கோடைக்கால சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. பொள்ளாச்சி, பழநி வழியாக தென்மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில் இயக்கப்படும் முதல் ரயில் இதுவாகும். இந்த வாராந்திர சிறப்பு ரயில்களுக்கு பயணிகளிடையே சிறப்பான வரவேற்பு இருந்தது. இந்த சிறப்பு ரயில்களுக்கான வருமானம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை குறித்து தென்காசியைச் சேர்ந்த பாண்டியராஜா ஆர்டிஐ யில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு தென்னக ரயில்வே அளித்த பதிலில், திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் 7,814 பயணிகளுடன் 38 லட்சம் வருமானமும், மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி ரயில் 8380 பயணிகளுடன் 42.14 லட்சம் வருமானமும் தந்துள்ளது. 2 1/2 மாதங்களில் இரு மார்க்கங்களிலும் 10 சேவைகள் இயக்கப்பட்ட இந்த வாராந்திர சிறப்பு ரயில்களையும் சேர்த்து மொத்தம் 16,194 பயணிகளுடன் 80 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. வருமானம் கொழிக்கும் இந்த கோவை, பொள்ளாச்சி, பழனி வழித்தடத்தின் வழியாக மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் இந்த வாராந்திர சிறப்பு ரயிலைத் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து பாண்டியராஜா கூறுகையில், தற்போது வியாழக்கிழமைதோறும் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம், வெள்ளிக்கிழமை தோறும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது குற்றாலத்தில் குளுகுளு சீசன் நிலவி வருவதாலும், சாரல் விழா நடைபெற்று வருவதாலும் தென்காசி வழியாகச் செல்லும் இந்த திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், இந்த சிறப்பு ரயில்கள் தட்கல் கட்டணத்தில் இயக்கப்படுவதால் ரயில்வேக்கும் கணிசமான வருமானம் கிடைக்கிறது. எனவே, தென்காசி, மதுரை, திண்டுக்கல், பழநி வழியாக மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் இயக்கம் வரும் ஆகஸ்ட் 18 ம் தேதி முடிவடைய இருப்பதால் உடனடியாக தென்னக ரயில்வே இந்த பொள்ளாச்சி பழனி ரயில் வழித்தடத்தின் வழியாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்களை நீட்டித்து இயக்க அறிவிப்பு வெளியிட வேண்டும். தற்போது ரயில் இயங்கிக் கொண்டிருக்கும்போதே நீட்டித்து இயக்க அறிவிக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் தொடர்ந்து முன்பதிவு செய்துகொள்ள எளிதாக இருக்கும் என்றார்.
-ம.பவித்ரா