உலக கோப்பை ஹாக்கி போட்டியின் பிரமாண்ட தொடக்க நிகழ்ச்சி இன்று ஒடிசாவில் தொடங்குகிறது. இதையொட்டி அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஒடிசாவில் 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு சிறப்புடன் செய்து வருகிறது. 2018-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன்பின்னர் கொரோனா பெருந்தொற்று பரவலையடுத்து உலக கோப்பை போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டில் உலக கோப்பை போட்டியை நடத்த ஒடிசா அரசு முன்வந்தது. இதன்படி, வருகிற 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதற்காக, சமீபத்தில் 15வது ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டியை நடத்தும் உரிமம் இந்தியாவுக்கு கிடைத்தது. இதனையடுத்து, ஒடிசாவின் கட்டாக் நகரில் உலக கோப்பை ஹாக்கி போட்டியின் பிரமாண்ட தொடக்க நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. இதற்காக நகரெங்கும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதுபற்றி ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்க்கி கூறும்போது, இந்த ஹாக்கி உலக கோப்பை போட்டிக்காக ஒடிசா அரசுடன் இணைந்து ஹாக்கி இந்தியா அமைப்பு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இந்த முறை, சுதந்திர போராட்ட வீரரான பிர்சா முண்டா பெயரில் சர்வதேச ஹாக்கி ஸ்டேடியம் ஒன்று 20 ஆயிரம் இருக்கை வசதிகளுடன் ரூர்கேலா நகரில் அமைக்கப்பட்டு உள்ளது.
இது இந்தியா மட்டுமின்றி உலகின் மிக பெரிய ஸ்டேடியம் ஆக இருக்கும். போட்டி தொடர்களில் பங்கேற்பதற்காக அணி வீரர்கள் வருகை தந்துள்ளனர். அனைத்து அணிகளும் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய இரு நகரங்களில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்கும். இதற்காக சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன என அவர் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து விளையாட்டுத்துறை செயலாளர் வினில் கிருஷ்ணா கூறுகையில், உலக ஆடவர் ஹாக்கி போட்டி ஜனவரி 11ம் தேதி கட்டாக்கில் உள்ள பாராபதி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஹாக்கி நிபுணர்கள், முன்னாள் ஹாக்கி வீரர்கள், மாநில மற்றும் தேசிய சங்க உறுப்பினர்கள் என அனைவரையும் இதில் ஈடுபடுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உலக கோப்பை மறக்க முடியாததாக இருக்கும் என்றும் கூறினார்.







