சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக நடிகை மீரா மிதுன், மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்த உள்ளனர்.
பட்டியலின சமூகத்தினரை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் பகுதியை சேர்ந்த ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர், நடிகை மீரா மிதுன் சமூக வலைத்தளங்களில் தனது பெயரையும், புகைப்படத்தையும் தவறாகப் பயன்படுத்தி அவதூறு பரப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்பேரில் அவதூறு பரப்புதல், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்த வழக்கில் அவரை கைது செய்துள்ளனர். அதற்கான வாரண்டை புழல் சிறையில் கொடுத்துள்ளனர்.








