விரைவில் தமிழில் மருத்துவ பாடப்புத்தகங்கள்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

அரசு பள்ளிகளில் படித்துவிட்டு மருத்துவம் படித்து வரும் மாணவர்களுக்காக விரைவில் தமிழில் மருத்துவ பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 32 லட்சம் மதிப்புடைய…

அரசு பள்ளிகளில் படித்துவிட்டு மருத்துவம் படித்து வரும் மாணவர்களுக்காக விரைவில் தமிழில் மருத்துவ பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 32 லட்சம்
மதிப்புடைய நவீன மருத்துவ உபகரணங்கள் அர்ப்பணிப்பு மற்றும் பெண்களுக்கான
சிறப்பு சிகிச்சை மையங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அறுவை சிகிச்சை இல்லாமல் நீண்ட நாள் வலியுடன் அவதிப்படுகின்ற முதுகுத்தண்டு வலியுள்ளவர்களுக்கு ரேடியோ அலைவரிசை வலி நிவாரண உபகரணம் செயல்பாட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. 25 லட்சம் மதிப்பீட்டிலான இந்த கருவி ரோட்டரி சங்கம் வழங்கியுள்ளது.

தனியார் மருத்துவமனையில் 40,000 வரை இந்த சிகிச்சைக்கு செலவு ஆகும். ஆனால்
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோயை அரை மணி நேரத்தில் கண்டறியும் கருவி நிறுவப்பட்டுள்ளது. மேலும், முழு உடல் பரிசோதனைக்கு பதிவு செய்யவும், முடிவுகளை தெரிந்து கொள்ளவும் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.


தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு உதவும் வகையில், முதலாம் ஆண்டு மருத்துவ பாடப்புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணியை மூன்று அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் ஓராண்டாக செய்து வருகின்றனர். விரைவில் அந்த பணி முடிந்த உடன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக் கணினியில் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்து தரப்படும் என்றார்.

சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் 16 ஏக்கர்
நிலத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்க திட்டம் உள்ளது. அதை தமிழ்வழி கல்லூரியாக
தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எந்தெந்த மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இல்லையோ மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளோம். தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார்.

மிக விரைவில் தமிழ் வழியில் பாடப் புத்தகங்கள் தயாரான பிறகு, ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கான ஒப்புதல் பெறப்பட்ட பிறகு தமிழ் வழி மருத்துவக் கல்லூரிக்கான கோரிக்கை மத்திய அரசிடம் முன்வைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.