இசைக் கோப்பினை கேட்டு மிரட்டுவதாக மாயமுகி என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர் மீது அப்படத்தின் இசையமைப்பாளர் ஜெயபாலா போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, மீத ஊதிய தொகையை வழங்காமல் கோப்பினை கேட்பதாக அவர் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாலா (45). தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகரான ரவி தேஜா வர்மா, நடிகை மனோ சித்ரா நடிப்பில் துவங்கப்பட்டு உருவாகி வரும் “மாயமுகி” என்ற திரைப்படத்தில் ஜெயபாலா இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆனார். இவருக்கு சம்பளமாக 1 லட்சம் ரூபாய் பேசப்பட்டு முன் பணத் தொகையையும் படத்தின் தயாரிப்பாளரான டில்லிபாபு வழங்கியுள்ளார். இதனால் அப்படத்தின் பாடல்களுக்கும் பிற காட்சிகளுக்குமான இசைப் பணிகளை ஜெயபாலா பகுதியளவு முடித்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான டில்லி பாபு “மாயமுகி” படத்தை தான் கைவிடுவதாகவும், இப்படத்திற்காக செய்த இசைப் பணிகள் அடங்கிய ஹார்டு டிஸ்கை தன்னிடம் ஒப்படைக்குமாறும் இசையமைப்பாளர் ஜெயபாலாவிடம் கூறியுள்ளார். அதற்கு ஜெயபாலா தன்னிடம் பேசிய ஒப்பந்தப்படி முன்பணம் போக மீதித் தொகையை அளித்தால் ஹார்டு டிஸ்கை ஒப்படைத்து விடுவதாகக் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த டில்லிபாபு ஜெயபாலாவிடம் ஹார்டு டிஸ்கை ஒப்படைக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக ஜெயபாலா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தயாரிப்பாளரான டில்லிபாபு மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் இரு தரப்பினரிடயேயும் விசாரணை நடத்தி வருகின்றனர்.







