உணவை வீணடிக்காமல் பாதுகாத்து மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை பெசன்ட் நகரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
சர்வதேச பசி தினம் உலகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மாரத்தான் போட்டியானது துவங்கியது. சர்வதேச பசி தினத்தையொட்டி புட் பேங்க் சென்னை நிறுவனர் சினேகா மோகன்தாஸ் தலைமையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உணவை பாதுகாக்க வேண்டும் பசியில் இருப்பவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடத்தில் ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாரத்தான் போட்டியானது நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் வீல் சேரில் அமர்ந்தபடியே உதவியாளர்களின் ஒத்துழைப்புடன் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்னர் பேசிய ஃபுட் பவுண்டேஷன் நிறுவனர் சினேகா மோகன்தாஸ், இந்தியாவில் அதிக அளவில் பலர் பசியால் உள்ளனர் என்றும், உணவுகளை வீணடிக்காமல் மீதமுள்ள உணவுகளை ஒருவருக்காவது வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றதாக தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா