அதிமுக சட்ட விதிகளில் பல அதிரடி மாற்றங்களை செய்து சிறப்பு செயற்குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கூடியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராகவும், அதிமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும் உள்ள தமிழ் மகன் உசேன், அக்கட்சியின் தற்காலிக அவை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் லீலாவதி ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் மறைவிற்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, சிறப்பு தீர்மானம் உட்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், அதிமுக பொன்விழாவை தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டாட, தொண்டர்களுக்கு அழைப்பு விடுப்பது, தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்துவது, பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசை வலியுறுத்துதல் மழை வெள்ள பாதிப்புகளை முன் ஏற்பாடுகள் மூலம் தடுக்க தவறிய திமுக அரசிற்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழு கூட்டத்தில், அதிமுக சட்ட விதிகளில் பல அதிரடி மாற்றங்களை செய்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், இந்த சட்ட திருத்தம், இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.