மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கின் உடல் நிலை சீராக இருப்பதாக, எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக காங்கிரஸ் கட்சித் தலைமை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அவரது உடல்நலனுக்காக பிரார்த்தனை செய்வதாக பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர் உடல்நிலை சீராக உள்ளது என்றும், அவருக்கு தேவையான ஊட்டச் சத்து, திரவ உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் கூறியுள்ளது.
மன்மோகன் சிங் கடந்து ஏப்ரல் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 10 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.







