செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ”மீண்டும் மஞ்சப் பை” என்ற திட்டத்தின் கீழ் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
நெகிழியை ஒழிக்க தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மீண்டும் மஞ்சப்பையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகள் செங்கல்பட்டில் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த மாரத்தான் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி செங்கல்பட்டு- மதுராந்தகம், ஜி.எஸ்.டி சாலை, காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வழியாக சென்று அங்கிருந்து மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது.
இந்த மினி மாரத்தான் போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதில் முதல் பரிசாக 3ஆயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய் என ஊக்கப்பரிசுகள்,சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன.
— சே. அறிவுச்செல்வன்







