மானாமதுரை வைகை ஆற்றில் களைகட்டிய நிலாச்சோறு நிகழ்ச்சி! கறிச்சோறுடன் ஆற்றுக்கு படையெடுத்த மக்கள்!

மானாமதுரை வீர அழகர் கோயில் நிலாச்சோறு நிகழ்ச்சிக்காக ஏராளமான மக்கள் வீடுகளில் சமைக்கப்பட்ட சைவ, அசைவ உணவு வகைகளை ஆற்றுக்கு கொண்டு வந்து நிலவொளியில் சாப்பிட்டு மகிழ்ந்தனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வீர அழகர்…

மானாமதுரை வீர அழகர் கோயில் நிலாச்சோறு நிகழ்ச்சிக்காக ஏராளமான மக்கள் வீடுகளில் சமைக்கப்பட்ட சைவ, அசைவ உணவு வகைகளை ஆற்றுக்கு கொண்டு வந்து நிலவொளியில் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து மறுநாள் மானாமதுரை கிராமத்தார் மண்டகப்படியில் அழகர் பத்தி உலாத்தல் நிகழ்ச்சி
நடத்தப்படும். இந்த மண்டகப்படிக்கு மானாமதுரை பகுதி மக்கள் நிலாச்சோறு மண்டகப்படி என்று பெயர் வைத்து அழைத்து வருகின்றனர்.

இந்த நிலாச்சோறு நிகழ்ச்சியை முன்னிட்டு, மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் சைவ, அசைவ உணவுகளை சமைத்து கார், வேன், லாரி மற்றும் டூவிலர்களில் வைகை ஆற்றுக்கு நேற்று கொண்டு வந்தனர். சித்ரா பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் வைகை ஆற்றில் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்களோடு சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

ஏராளமானோர் இரவு முழுவதும் வைகை ஆற்றில் படுத்து உறங்கி அதிகாலை தங்களது வீடுகளுக்கு திரும்புகின்றனர்.

இந்த நிலாச்சோறு நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, ஏராளமான
முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தங்களது வீடுகளில் சமைத்த உணவுகளை வைகை
ஆற்றுக்குள் கொண்டு வந்து உறவினர்களோடு சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.