’ஜெய்ஸ்ரீராம்’ கோஷத்துடன் கல்யாண வீட்டில் புகுந்து துப்பாக்கிச்சூடு

ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட்டுக்கொண்டே, கல்யாண வீட்டில் துப்பாக்கியால் சுட்டதில், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் கொல்லப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் பகுதியில் உள்ள பைண்ட்சோடா மண்டியில், நேற்று திருமண விழா நடந்துகொண்டிருந்தது.…

ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட்டுக்கொண்டே, கல்யாண வீட்டில் துப்பாக்கியால் சுட்டதில், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் கொல்லப்பட்டார்.

மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் பகுதியில் உள்ள பைண்ட்சோடா மண்டியில், நேற்று திருமண விழா நடந்துகொண்டிருந்தது. இந்த விழாவை, கைதாகி சிறையில் இருக்கும் சாமியார் ராம்பாலின் ஆதரவாளர்கள் நடத்தினர். பிற்பகல் 2 மணிக்கு அங்கு வந்த 10-15 பேரை கொண்ட கும்பல், திருமணம் தவறான முறையில் நடைபெறுவதாகக் கூறி, சிலரை சரமாரியாக தாக்கியது.

பின்னர் சிவப்பு சட்டை அணிந்த ஒருவர், துப்பாக்கியால் ஒருவரை நோக்கி சுட்டார். இதில் தேவிலால் மீனா என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கும்பல் ஜெய்ஸ்ரீராம் என்று கோஷமிட்டபடி தப்பிச் சென்றது. படுகாயமடைந்த தேவிலால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். லலித், மங்கள், கமல் ஆகிய 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.