கள்ளக்குறிச்சி அருகே பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் மின்னல் வேகத்தில் சென்றவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள தொட்டியம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சுரேஷ். மெக்கானிக் இன்ஜினியரான சுரேஷ்ஷுக்கும், அகில்மணி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 1 வருடம் ஆகின்றது. இந்நிலையில், அகில்மணி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுரேஷ் தனது குழந்தையைப் பார்த்துவிட்டு ராயல் என்ஃபீல்ட் பைக்கில் கள்ளக்குறிச்சி – குதிரைசந்தல் வழியாக உலகங்காத்தான் செல்லும் ரோட்டில் சந்தோஷத்தில் வேகமாகச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் அங்குள்ள பள்ளத்தில் பயங்கர சத்தத்துடன் விழுந்துள்ளது. இதில், சுரேஷுக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் சுரேஷை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கச்சராபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், குழந்தை பிறந்த சந்தோஷத்தில் சுரேஷ் வேகமாக ஹெல்மெட் அணியாமல் சென்றதால் பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.