டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த மேற்குவங்க  முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தங்கள் மாநிலத்திற்கு நிலுவையில் உள்ள சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேற்குவங்க முதலமைச்சரும்…

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த மேற்குவங்க  முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தங்கள் மாநிலத்திற்கு நிலுவையில் உள்ள சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி 4 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவரது இந்த பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படும் நிலையில், இந்த பயணத்தின் முக்கிய கட்டமாக பிரதமர் மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

 சுமார் 40 நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படும் இந்த சந்திப்பின்போது, மேற்குவங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை பிரதமர் மோடியிடம் மம்தா பானர்ஜி வழங்கினார். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் திட்டங்களை மேற்கு வங்கத்தில் செயல்படுத்துவதற்காக வழங்கப்பட வேண்டிய சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

 

மேலும் ஜிஎஸ்டி வரி பங்கீட்டில் மேற்கு வங்கத்திற்கு வழங்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க பிரதமர் மோடியிடம் மம்தா பானர்ஜி வலியுறுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொடர்ந்து கடும் மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்நிலையில், குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மார்க்கரெட் ஆல்வாவிற்கு திரிணாமுல் காங்கிரஸ்  ஆதரவு அளிக்கவில்லை. இதனால் பாஜகவிற்கு எதிரான கடும் எதிர்ப்பை திரிணாமுல் காங்கிரஸ் கைவிடுகிறதா என்ற விவாதம் மேற்கு வங்க அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.

இந்நிலையில் பிரதமர் மோடியை டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இதற்கிடையே டெல்லியில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்துப் பேசவும் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் 7ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்திலும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ள உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.