முகநூல் மூலமாக ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புதுச்சேரி நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மலேசியாவைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ, புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு புகார் அனுப்பியுள்ளார்.
மலேசியா நாட்டின் பகாங் மாநிலம், சபாய் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் தமிழச்சி காமாட்சி துரைராஜூ. மலேசியவாழ் தமிழரான இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு
புதுச்சேரியைச் சேர்ந்த வெற்றிவேல் பிரகாஷ் என்ற பெயரில் மர்ம நபர் ஒருவர் முகநூல் மூலம் அறிமுகமாகி உள்ளார். அதன்பிறகு பணி நிமித்தம் காரணமாக தனது முகநூல் பக்கத்தை தமிழச்சி காமாட்சி துரைராஜூ பார்க்காமல் இருந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் தொடர்ந்து அந்த மர்மநபர் முகநூல் பக்கத்தில் சட்டப்பேரவை உறுப்பினருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் ஆபாச பதிவுகளை பதிவிட்டு வந்துள்ளார். மேலும் முகநூல் மெசேஞ்சர் மூலம் கால்செய்து தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். இதனை கவனித்த சட்டப்பேரவை உறுப்பினரின் உதவியாளர், இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கட்சி நிர்வாகிகள், வெற்றிவேல் பிரகாஷ் என்ற பெயரில் ஆபாச பதிவுகளை பதிவிட்ட நபரை, முகநூல் மூலமாக தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த மர்ம நபர் தனது முகநூல் பக்கத்தை பிளாக் செய்திருக்கிறார்.
மேலும், தமிழச்சி காமாட்சி துரைராஜூவின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பகிர்வேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த சட்டப்பேரவை உறுப்பினர் தமிழச்சி காமாட்சி துரைராஜூ, இது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, மர்ம நபர் பதிவிட்ட முகநூல் பதிவுகளுடன், ஆடியோ பதிவு மூலம் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அவர் அந்த ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது ”மலேசியா நாட்டில் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள தமிழ்பெண்ணான எனக்கே இதுபோன்ற நிலை என்றால், அவரது ஊரில் என்ன செய்வார் என்பதை யோசித்து பார்க்கவே முடியவில்லை. இதனை வளரவிடக்கூடாது. இதனை கருத்தில் கொண்டு அந்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.