உத்தரப்பிரதேசத்தில் நாளை தொடங்கும் மகா கும்பமேளா – சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

உத்திரபிரதேசத்தில் நாளை தொடங்கவுள்ள மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்க வருபவர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் நாளை (ஜன. 13) மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சி வருகின்ற பிப்.26-ம் தேதி அன்று நிறைவு பெறுகிறது. பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதால் கங்கை, யமுனை மற்றும் கண்களுக்கு புலப்படாத சரஸ்வதி ஆறு ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறுவதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. தொடர்ந்து 45 நாட்கள் நடக்கும் திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விழாவில் கலந்துகொள்ள வருபவர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது மற்றும் தற்காலிக குடில்களை அம்மாநில அரசு அமைத்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனி சிற்றுண்டி பகுதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில மருத்துவ உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மகா கும்பமேளா நாளை தொடங்குவதை முன்னிட்டு, மலைக்குகைகளிலும் வனங்களிலும் வசிக்கும் நாகா துறவிகள் உள்ளிட்ட பல வகை துறவிகளும் குவிந்துள்ளனர். பிரயாக்ராஜ் நகரை நோக்கி சாதுக்களும், துறவிகளும், சன்னியாசிகளும், அகோரிகளும் வந்த வண்ணம் உள்ளனர். விதவிதமான வேடங்களில் வந்த அகோரிகள் வண்ணப்பொடிகளை தூவியும் கழுத்தில் மண்டை ஓடு மாலையுடன் மந்திரங்கள் முழங்க தெருக்களில் உலா வந்த போது பக்தர்கள் அவர்களை பக்தி பரவசத்துடன் வணங்கினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.