மீண்டும் தனக்கு பணி வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் தெரிவித்துள்ளார்.
மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுத்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு தெரியாமல் நிகழ்ந்த காரணத்தால் மீண்டும் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல், “பேராசிரியர்களுக்கும், நிர்வாகத்திற்கும் தெரியாமல் எந்த ஒரு ஒப்புதலும் இல்லாமல் மூத்த மருத்துவ மாணவர்கள் சமஸ்கிருத உறுதிமொழியின் ஆங்கில மொழிபெயர்ப்பை மேடையில் படித்தார்கள். மேடையில் மாணவர்கள் படிக்கும் போதுதான் நிர்வாகத்திற்கு தெரியும்” என்று குறிப்பிட்டார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியனை இல்லத்தில் சந்தித்து நடந்த விபரங்களை நேரில் தெரிவித்து நடந்த தவறுக்கு மதுரை மருத்துவக் கல்லூரி சார்பாக வருத்தத்தை தெரிவித்தோம் என்ற ரத்தினவேல், “முதலமைச்சர் கருணை உள்ளத்தோடும் அன்போடும் எங்கள் சேவையை நினைவில் கொண்டு என்னை மீண்டும் மருத்துக் கல்லூரி
டீனாக நியமித்துள்ளார்” என்று தெரிவித்தார். இன்று மீண்டும் மருத்துவக் கல்லூரி டீனாக பொறுப்பேற்றுக் கொண்டதாக குறிப்பிட்ட அவர், உத்தரவை வழங்கிய முதலமைச்சருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி எனத் தெரிவித்தார்.