மதுரை அமலாக்கத்துறை அதிகாரி கைது – முதல் தகவல் அறிக்கை சொல்வது என்ன?

லஞ்சம் பெற்ற புகாரில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி,  20 லட்சம் லஞ்சம்…

லஞ்சம் பெற்ற புகாரில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி,  20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர்.  இதையடுத்து அங்கித் திவாரியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் 13 மணி நேரமாக சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது 50க்கும் மேற்பட்ட இந்தோ-திபெத் போலீசாரும் நூற்றுக்கும் மேற்பட்ட மாநில காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 7 மணிவரை நீடித்த இந்த சோதனையின் முடிவில் பல்வேறு முக்கிய ஆவணங்களையும், வருகை பதிவேடுகளையும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அத்துடன் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரியின் வங்கிக் கணக்கு பண பரிவர்த்தனை, மெயில் மற்றும் வாட்ஸ் அப் தகவல்கள் மற்றும் அங்கித் திவாரி கையாண்ட வழக்குகளுக்கான ஆவணங்களையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.  இதில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள் :

“அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது சேவையை களங்கப்படுத்திவிடுவதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியுள்ளார்.  மேலும்,  லஞ்சம் தராவிட்டால்,  கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அரசு மருத்துவரை மிரட்டியுள்ளார்.  உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சப் பணத்தில் பங்கு தர வேண்டும் எனக் கூறி திண்டுக்கல் மருத்துவரை அங்கித் திவாரி மிரட்டியுள்ளார்.

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி,  காவிரி ஆற்றில் மணல் குவாரி தொடர்பான பணிகளை மேற்கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.  திண்டுக்கல் அரசு மருத்துவர் லஞ்சப் பணத்தை தயார் செய்துவிட்டு தொடர்பு கொண்டபோது மணல் குவாரி தொடர்பான சோதனையில் ஈடுபட்டிருப்பதாக அங்கித் திவாரி கூறியுள்ளார்.

ஏற்கனவே பல பேரை மிரட்டி பணம் பறித்துள்ளதால்,  மணல் குவாரி அதிபர்களிடமும் அவர் லஞ்ச பேரம் பேசினாரா என விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  லஞ்ச பணத்தை ஹவாலா பணப்பரிமாற்றம் செய்பவர்கள் மூலம் கொடுத்தனுப்ப முடியுமா என அங்கித் திவாரி மருத்துவரிடம் கேட்டுள்ளார்.  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் வாங்கியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது”

இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.