மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க சுமார் 2 ஆயிரம் வீரர்கள் முன் பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன் பதிவு நேற்று தொடங்கியது. இணைய தள முன் பதிவு இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. அதன்முடிவில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 4,534 காளைகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் 1,999 மாடு பிடிவீரர்கள் முன் பதிவு செய்துள்ளனர். கடந்த முறை நடைபெற்ற போட்டிகளில் சுமார் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்ற நிலையில் இந்த வருடம் 2 மடங்கு அதிக அளவில் முன் பதிவு செய்துள்ளனர்.
என்றாலும், போட்டி நடைபெறும் தினத்தன்று காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெறும் நிலையில் அதில் தேர்வு செய்யப்படும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.








