“வணங்கான்” பெயரை பயன்படுத்த இயக்குனர் பாலாவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

வணங்கான் என்ற பெயரை பயன்படுத்த இயக்குனர் பாலாவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல…

வணங்கான் என்ற பெயரை பயன்படுத்த இயக்குனர் பாலாவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய பாலா தற்போது ‘வணங்கான்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தின் போஸ்டர், டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது.

இதனிடையே, வணங்கான் என்ற தலைப்பை ஏற்கனவே பதிவு செய்துள்ளதாகவும், இதனால் இந்த தலைப்புக்கு தடை விதிக்கக்கோரி ஆரஞ்ச் புரொடக்சன்ஸ் உரிமையாளர் எஸ்.சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில்,  இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குனர் பாலா தரப்பில், “2 ஆண்டுகள் அமைதியாக இருந்த பின்னர் பணம் பறிக்கும் நோக்கில் கடைசி நேரத்தில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டது.

தொடர்ந்து, வணங்கான் என்ற பெயரை பயன்படுத்த இயக்குனர் பாலாவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, வணங்கான் என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.