‘மாமன்னன்’ படத்தின் ‘கொடி பறக்குற காலம்’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மாமன்னன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தில் 7 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. மாமன்னன் திரைப்படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்து வந்தது.
இந்நிலையில் கடந்த மாதம், யுகபாரதி எழுதிய வடிவேலுவின் குரலில் ’ராசா கண்ணு’ என்னும் பாடல் வெளியானது. இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய ’ஜிகு ஜிகு ரயில்’ சிறப்பு வீடியோவாக வெளியாகி டிரெண்ட் ஆனது. அதன் பின்னர் காதல் பாடலான ‘நெஞ்சமே நெஞ்சமே’ பாடல் வெளியானது. பின்னர் கடந்த வாரம் நான்காவது பாடலான ‘மன்னா மாமன்னா’ லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதி பாடியுள்ளார்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள “கொடி பறக்குற காலம்” பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக போஸ்டர் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.
அதன்படி இன்று மாலை மாமன்னன் திரைப்படத்தின் கொடி பறக்குற காலம் எனும் பாடலின் லிரிக்கில் வீடியோ வெளியானது. இப்பாடலையும் பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ளார். பிரபல பாடகியான கல்பனா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாடகிகளான ரக்ஷிதா சுரேஷ், தீப்தி சுரேஷ் மற்றும் அபர்ணா ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடலின் லிரிக்கல் வீடியோ “ சிறகுகள் கேட்பது பந்தையத்திற்காக அல்ல, பறத்தலுக்காக” எனும் மாரி செல்வராஜின் வரிகளுடன் தொடங்குகிறது.







