’இந்தியன் 2’ பட விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், லைகா நிறுவனம் ஐதராபாத் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளதாக இயக்குனர் ஷங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உட்பட பலர் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கும் படம், ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், பல்வேறு காரணங்களால் தடைபட்டுள்ளது. இந்நிலையில், இயக்குநர் ஷங்கர், பிரபல தெலுங்கு ஹீரோ, ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்க இருக்கி றார்.
இதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. கூடவே, ’அந்நியன்’ படத்தை இயக்குநர் ஷங்கர் இந்தியில் ரீமேக் செய்யவும் தயாராகி வந்தார்.
இதற்கிடையே, இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க, ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில், ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என தனி நீதிபதி மறுத்து விட்டார்.
இதை எதிர்த்து லைகா தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள போது, ஐதராபாத் நீதிமன்றத்தில் இதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்துள்ளதாக லைகா நிறுவனத்தின் மீது புகார் கூறினார். மேலும், தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ள வழக்கை தள்ளிவைக்க லைகா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ள, தடை கோரிய மனு மீது தீர்வு கண்ட பின், மேல் முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம் எனக் கூறி, இந்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணையை தலைமை நீதிபதி அமர்வு, மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தது.







