ஓமலூர் அருகே காதலியை விட காதலனுக்கு 10 வயது அதிகம் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதுகாப்பு கேட்டு தீவட்டிப்பட்டி காவல் நிலைத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி தாலுக்கா கணவாய் புதூர்
ஊராட்சி ராமமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் பிரபாகரன் 29. இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
இதே போன்று ராமமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் தென்றல் (வயது 19). இவர் தர்மபுரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒரே ஊர் என்பதால் திருப்பூரில் இருந்து ஊருக்கு வரும் போதெல்லாம் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டு இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இவர்களது காதல் தென்றலின் பெற்றோருக்கு தெரிய வர தனது மகளை விட 10 வயது மூத்தவராக உள்ளதால் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் தர்மபுரி பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்துகொண்டு அவரது நண்பர்கள் வீட்டில் தங்கி இருந்தனர். தற்போது இவர்கள் இருவரும் பாதுகாப்பு கேட்டு தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் இருவீட்டார் பெற்றோரை அழைத்து சமரசம் செய்ததில் தென்றலின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் திருமண வயதை எட்டியதால் காதலியை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் இப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.








