மதுரையில் ரயில் இன்ஜின் தடம் புரண்ட விவகாரம் தொடர்பாக மதுரை கோட்டம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை வரை மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு மதுரையில் டீசல் இன்ஜின் மாற்றப்படுவது வழக்கம். அதேபோல இன்று அதிகாலை இஞ்சின் மாற்றம் நடைபெற்றது. பொதிகை எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து வழக்கமான நேரத்திற்கு புறப்பட்டுச் சென்றது.
இந்த ரயிலில் இருந்து கழற்றப்பட்ட மின்சார இஞ்சின் பின்புறமாக பார்சல் ஆபிஸ் அருகே நிறுத்தச் சென்றபோது மூன்று சக்கரங்கள் தடம் புரண்டன. தடம் புரண்ட இன்ஜினை சரி செய்வதற்காக காலை 07.25 மணி முதல் 20 நிமிடத்திற்கு மின் பாதையில் உள்ள மின்சாரம் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டது. இன்ஜின் தடம் புரண்டதால் திண்டுக்கல் மார்க்கத்தில் செல்ல வேண்டிய ரயில்கள் சிறிது காலதாமதமாக புறப்பட்டன.
மதுரை – செகந்திராபாத் சிறப்பு ரயில் ஒரு மணி நேரமும், வைகை எக்ஸ்பிரஸ் 10 நிமிடமும், பழனி சிறப்பு ரயில் 9 நிமிடமும், தேனி சிறப்பு ரயில் 32 நிமிடங்களும் மதுரையில் இருந்து காலதாமதமாக புறப்பட்டன என மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








