தமிழ்நாட்டில் மேலும் 27 மாவட்டங்களில் நேற்று பேருந்து சேவை தொடங்கிய நிலையில் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அடிப்படையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை தொடர்ந்து, மேலும் 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நேற்று தொடங்கியது. முக கவசம் அணிந்து வந்த பயணிகள், சமூக இடைவெளியை பின் பற்றி பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு நேற்று காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.திருச்சி மாவட்டத்தில் 49 நாட்களுக்கு பிறகு பேருந்து போக்குவரத்து நேற்று காலை முதல் மீண்டும் தொடங்கியது. திருச்சி மண்டலத்தில் 945 பேருந்துகள் உள்ள நிலையில் அதில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. பயணிகள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்தபடி, பயணித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த விசைத்தறி நிறுவனங்கள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டதால், தொழிலாளர்கள் உற்சாகம் அடைந்தனர். மேலும், சலூன்கள் திறக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் அதிகளவில் வந்திருந்தனர்.







