ஜெயங்கொண்டம் அருகே மது பாட்டிலில் குட்டிப் பாம்பு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குடிமகன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் சுத்தமல்லியில் உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வருகிறார். இன்று மதியம் 2 மணியளவில் சுத்தமல்லி கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கியுள்ளார் சுரேஷ். அதில் பாதியை குடித்துவிட்டு மீதியை வீட்டில் வைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் வீட்டில் இருந்தவர்கள் மது பாட்டிலை பார்த்தபோது அதில் குட்டி பாம்பு ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சுரேஷிடம் தகவல் கூறிய நிலையில் பதற்றம் அடைந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சுரேஷ் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே மது பாட்டில்களில் தவளை, பூச்சி உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டிருந்தது.
இப்போது, குட்டிப்பாம்பே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது வாங்கும்போதே குட்டிப்பாம்பு இருந்ததா, அல்லது வாங்கிய பிறகு கவனக் குறைவாக இருக்கும்போது பாட்டிலில் விழுந்துவிட்டதாக என விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.