உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் உணவருந்த அனுமதித்தால் அபராதம் விதிக்கப்பட்டு, தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அரசு முழுவீச்சில் கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அந்த வகையில் சென்னையில் முக்கிய பகுதிகளான தி.நகர் ரெங்கநாதன் தெரு, கொத்தவால்சாவடி உள்பட 9 இடங்களில் உள்ள கடைகள் மூட உத்தரவிடப்பட்டது.
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்ஒரு பகுதியாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள 2 ஆயிரத்து 608 மண்டபங்கள், உணவகங்கiளில் வருவாய்துறை அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டதில், 57 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதுவரை 2 லட்சத்து 21 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் உணவருந்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மீறும் உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களுக்கான தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.







