கொரோனா குணமடைந்த பிறகு, பண மோசடி வழக்கில் ஆஜராவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடிதம் அளித்துள்ளார்.
ஆவின் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 5-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில், இன்று அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த 28-ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
ஆனால், அவர் தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டு இருப்பதால், இன்று விசாரணைக்கு ஆஜராக முடியாது எனவும், தன் மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனவும் குற்றப்பிரிவு காவல்துறைக்கு இன்று கடிதம் அளித்தார்.
அண்மைச் செய்தி: தை அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு
அந்த கடிதத்தில், தனக்கு கடந்த 23-ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், அதனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்று சான்று வந்ததும், விசாரணைக்கு தான் ஆஜராகுவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்காக இன்று அவர், நேரில் குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு வந்து, காரில் அமர்ந்தபடியே, தனது உதவியாளர் வழியாக கடிதம் அளித்துவிட்டு, பின்னர் தனது வழக்கறிஞர்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
கடிதத்தை பெற்றுக்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை, “கொரோனா பரிசோதனையில் ராஜேந்திர பாலாஜிக்கு கொரோனா தொற்று இல்லை என சான்று வந்தவுடன், மீண்டும் சம்மன் அனுப்பி அவரை விசாரணைக்கு அழைக்க இருப்பதாக” தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








