பாலின சமத்துவத்துடன் நம் நாட்டை முன்னேற்றுவோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், அரசியலமைப்புச் சட்டப்படி வாக்களிக்கும் உரிமையை பெண்கள் பெற்றதை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 26-ம் தேதி அமெரிக்காவில் பெண்கள் சமத்துவ தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கு சமமான வாக்குரிமையை வழங்குவதற்காக 1920 ஆம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட்டு பெண்களுக்கான சமத்துவ நாள் கொண்டு வரப்பட்டது. இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக “இன்றைய பாலின சமத்துவம், நாளைய வளர்ச்சி” என்பதேயாகும்.
ஆகஸ்ட் 25 அன்று வெள்ளை மாளிகை வெளியிட்ட ஒரு பிரகடனத்தில், “பெண்கள் சமத்துவ தினத்தில், 19 வது திருத்தத்திற்கு வழிவகுத்த உலகளாவிய வாக்குரிமைக்கான இயக்கத்தை நாங்கள் மதிக்கிறோம் என்றும் பல ஆண்டுகளாக பெண்களின் முன்னேற்றத்தைக் கொண்டாடி வருகிறோம் என்றும், மேலும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் எங்கள் உறுதிப்பாட்டை புதுப்பிக்கிறோம் என்றும் கூறியுள்ளது. குழந்தை தேவையா இல்லையான என்பதை பெண்களே தீர்மானிக்கவும், அபார்ஷனுக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கவும் உறுதிப்பாடு அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , “பாலின சமத்துவத்தை நோக்கி நமது நாட்டின் முன்னேற்றத்தை எடுத்து செல்லவும், வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாத்து அதனை வலுப்படுத்தவும் அமெரிக்க மக்களுக்கு அழைப்பு விடுகிறேன்” என்றும் கூறியுள்ளார்.
பெண்கள் சமத்துவ தினத்தின் வரலாறு
1973 ஆம் ஆண்டு நியூயார்க் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லா அப்ஸூக் என்ற பெண்ணால் வெளியிடப்பட்ட தீர்மானத்திற்குப் பிறகே பெண்களின் சமத்துவ நாள் கொண்டாடப்பட்டது. அமெரிக்கப் பெண்களுக்கு வாக்களிக்கும் அரசியலமைப்பு உரிமையை வழங்கும் பிரகடனத்தில் 1920 ஆம் ஆண்டில் அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பெயின்பிரிட்ஜ் கோல்பி கையெழுத்திட்டார். இந்த நாள் முதன்முதலில் 1971 இல் கொண்டாடப்பட்டு, 1973 ஆம் ஆண்டு காங்கிரஸால் நிறுவப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆண்டு தோறும் அமெரிக்க அதிபர்களால் பாலின சமத்துவ நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.







