லியோ சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க கோரிய வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தை வரும் 19ம் தேதி ஆறு காட்சிகள் திரையிட அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தபோது, வரும் 19ம் தேதியன்று ஆறு காட்சிகள் திரையிட அரசிடம் அனுமதி கோரியதாக படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு 5 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளித்ததாகவும், ஆறு காட்சிகள் திரையிட நேரமிருப்பதால் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும், இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இரண்டு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.







