பாலக்கோடு அருகே சாமனூர் கிராமத்தில் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். சிறுத்தையின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சாமனூர் கிராமம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் வனவிலங்குகள் கிராமத்தில் உள்ள ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை தூக்கிச் செல்லும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது.
இந்நிலையில் சிறுத்தை ஒன்று சாமனூர் கிராமத்திற்குள் இன்று புகுந்ததால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்தனர். உடனடியாக சிறுத்தை ஊருக்குள் புகுந்தது குறித்து பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் – உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு ஆர்.எஸ்.எஸ். நோட்டீஸ்
சிறுத்தையை பிடிக்கும் வரை பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குள் செல்லவோ, இரவு நேரங்களில் வெளியே வரவோ வேண்டாம் என வன சரக அலுவலர் நடராஜ் கேட்டு கொண்டார். இதனிடையே சாமனூர் மலை உச்சியில் சிறுத்தை இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.







