காஞ்சிபுரம் அருகே பேராசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில், அரசுப்பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் தமிழ் பேராசிரியையாக பணியாற்றி வந்த அனிதா என்பவர், ஓரிக்கை பகுதியிலுள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனைவரும் உணவருந்திய பின்னர், வழக்கம் போல் அனிதா மேல்மாடியிலுள்ள அவரது அறைக்கு உறங்க சென்றுள்ளார். நள்ளிரவில் மேல்மாடியில் திடீர் என அலறல் சத்தம் கேட்டதை தொடர்ந்து, அனைவரும் மாடிக்கு சென்றுள்ளனர். கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தததையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது, அங்கு படுக்கையில் காயங்களுடன் பேராசிரியை அனிதா உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அனிதாவுடன் செல்போனில் பேசியவர்கள் விவரங்களை சேகரித்தனர்.
இதில் காஞ்சிபுரம் அரசு பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் சுதாகர் என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் அனிதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் போலீசார் விசாரணையில், அனிதாவுடன் சுதாகர் நீண்ட நாட்கள் பழகி வந்ததை ஒப்புக்கொண்டார். இருவரும் அடிக்கடி வெளியில் சந்தித்து நெருக்கமாகவும் இருந்துள்ளனர். இந்நிலையில் சுதாகருக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்திருப்பது அனிதாவுக்கு தெரிய வரவே, முதல் மனைவியை விவாகரத்து தன்னை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள அனிதா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கொலை நடந்த அன்றும் அலைபேசியில் இதே வாக்குவாதம் தொடர்ந்ததால், அனிதா தங்கியிருந்த அறைக்கு வந்து அவரை சுதாகர் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இதனையடுத்து உடற்கல்வி ஆசிரியர் சுதாகரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை, காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.







