கலைஞர் நூற்றாண்டு விழாவில் முன்னணி நடிகர்கள் பங்கேற்பு!

கலைஞர் நூற்றாண்டுவிழாவில் முன்னணி நடிகர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஜன.6 ம் தேதி தமிழ் திரையுலகம் நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கான அழைப்பிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் சங்கம் சார்பில் பூச்சி முருகன், இயக்குநர்…

கலைஞர் நூற்றாண்டுவிழாவில் முன்னணி நடிகர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

ஜன.6 ம் தேதி தமிழ் திரையுலகம் நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கான அழைப்பிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் சங்கம் சார்பில் பூச்சி முருகன், இயக்குநர் சங்கம் சார்பில் லிங்குசாமி,  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முரளி ராமநாராயணன்,  தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் இன்று வழங்கினர்.

மறைந்த திமுக தலைவரும்,  முன்னாள் முதல்வருமான கருணாநிதி நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.  அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் ‘கலைஞர் 100 விழா’ பிரம்மாண்டமாக நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.

அதன்படி,  தமிழ் திரை உலகில் தனது வசீகரமான வசனத்தால் மக்களை சிந்திக்க வைத்த அற்புதமான வசனகர்த்தா மு. கருணாநிதி  நூற்றாண்டு விழாவினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் அனைத்து திரை உலக சங்கங்களும் இணைந்து வரும் 6.1.2624 சனிக்கிழமையன்று சென்னையில் கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கோலாகலமாக கொண்டாடுகிறது.

இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்,  நடிகர்கள் கமல்ஹாசன்,  ரஜினிகாந்த் மற்றும் தமிழ்திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் தெலுங்கு பட உலகிலிருந்து சிரஞ்சீவி,  வெங்கடேஷ் , மலையாள பட உலகிலிருந்து மம்முட்டி,  மோகன்லால்,  கன்னட பட உலகிலிருந்து சிவராஜ்குமார் மற்றும் இந்தி திரை உலகிலிருந்து முன்னணி நட்சத்திரங்கள் என அனைத்து மொழி நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

6 மணி நேரம் நடைபெற இருக்கும் இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கருணாநிதி வசனம் தீட்டிய,  பாடல்கள் எழுதிய படங்களில் இருந்து பல புதுமையான காட்சி அமைப்புகள்,  கலைஞரை பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள் அடங்கிய ஆவண படங்கள் என பல தரப்பட்ட பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகள் மேடையில் மக்களுக்கு காட்டப்பட உள்ளன.

இந்த விழாவிற்காக டெல்லியில் இருந்து ட்ரோன்கள் வரவழைக்கப்பட்டு பிரமாண்டமான ஷோக்கள் பரவசப்படுத்த உள்ளன.  இந்த விழவிற்காக 50க்கும் மேற்பட்ட முன்னனி இயக்குனர்கள், 20 க்கும் மேற்பட்ட நடன மாஸ்டர்கள் ரிகர்சல் பார்த்து வருகின்றனர்.

இந்த பிரம்மாண்டமான விழாவிற்காக மிகப்பெரிய மேடை’ 20 ஆயிரம்பேர் அமர்ந்து பார்க்க நாற்காலிகள்,  50க்கும் மேற்பட்ட டிஜிட்டல் திரைகள் என வேலைகள் மும்முரமாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மேற்பார்வையில்,  பெப்சி பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.