வழக்கறிஞர்கள் தங்களின் வாத திறமையை ஏழை, எளிய மக்களின் நலனுக்கான பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சென்னை பெருங்குடியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக இணை வேந்தரும், சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி, துணைவேந்தர் சந்தோஷ்குமார், உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ், முன்னாள் நீதிபதி கிருபாகரன், பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளி விழா மலரை வெளியிட்டு, கல்வெட்டை திறந்து வைத்து உரையாற்றினர். அப்போது பேசிய அவர், சட்டப்படிப்புக்கு என தெற்காசியாவில் முதன்முறையாக தொடங்கப்பட்ட பெருமைமிகு பல்கலைக்கழகம் இது. கருணாநிதியால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழாவில் முதலமைச்சராக பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அம்பேத்கரின் பெயரில் சட்டப் பல்கலைக்கழகம் நிறுவிய முதல் மாநிலம் தமிழ்நாடு. அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிராவில் உள்ள சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் பெயரை வைக்க கடும் எதிர்ப்பு இருந்தது. தனக்கு வீடாக ஒதுக்கப்படவிருந்த இடத்தை, சட்டப் பல்கலைக்கழகம் அமைக்க வழங்கியவர் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி என்று தெரிவித்தார்.
அனைவருக்கும் தரமான உயர்கல்வியை வழங்க, பல்வேறு சீரிய திட்டங்களுக்கு செயல் வடிவம் தந்து வருகிறோம். இலவச பயணச்சீட்டு சலுகை மாணவியருக்கு பெரும் உதவியாக உள்ளது. அரசுப் பள்ளி மாணவியருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உயர்கல்விக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டப் பல்கலைக்கழகம் மேலும் பல சட்ட மாமேதைகளை உருவாக்க வேண்டும்.
வாதத்திறமையை ஏழை, எளிய மக்களின் நலன்களுக்காக பயன்படுத்த வேண்டும். அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளையும், சமூக நீதியையும் நிலைநாட்டும் வகையில் வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும். சட்டம் தாண்டி, சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்டும். நீதிக்கு வெற்றி தேடித்தரும் வழக்கறிஞர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும் என்று கூறினார்.







