வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் கணவனுக்காக மனைவி பாடும் பாடலாக வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல் பலரின் ப்ளே-லிஸ்ட்டில் ரிப்பீட் மோடில் ஒலித்துக் கெண்டிருக்கிறது.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் அண்மையில் வெளியான படம் வெந்து தணிந்தது காடு. சித்தி இட்னானி, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். திரையரங்கங்களில் வெளியான நான்கே நாட்களில் சுமார் ரூ.50 கோடி வசூல் செய்ததோடு இதுவரை வெளியான சிம்பு படங்களிலேயே இந்த படம்தான் அவருக்கு மிகப்பெரிய ஓபனிங்காக அமைந்தது. இந்நிலையில் பல்வேறு விமர்சனங்களைத் தாண்டி இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
குறிப்பாக “மல்லிப்பூ” எனும் பாடல் தற்போது இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருவதோடு யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. கவிஞர் தாமரை எழுதிய இப்பாடலை மதுஸ்ரீ பாடியுள்ளார். வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் கணவனுக்காக மனைவி பாடும் பாடலாகப் படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல் பலரது ப்ளே-லிஸ்ட்டில் ரிப்பீட் மோடில் ஒலித்துக் கெண்டிருக்கிறது. தலைவன், தலைவியைப் பிரிந்து பொருள் தேட செல்லும் போது அவர்களுக்கிடையே இருக்கும் பாசப் போராட்டங்களைப் பல தமிழ் இலக்கியங்கள் மிக ஆழமாகவும் கவித்துவமாகவும் கூறியுள்ளன. அதில் தலைவி, தலைவனுக்கு தன் பிரிவின் வலியைப் பல வடிவில் தெரிவிப்பாள்.
மேலும் அவளின் அந்த செய்தியைத் தலைவனிடம் தூதாக அனுப்பப் பலரிடம் கோரிக்கை வைப்பாள். தலைவியின் தோழி, மேகம், காற்று, புறா, அன்னம், கிளி, வண்டு எனப் பல பரிமாணங்களில் தனது பிரிவின் வலியைத் தூதாக விடுவாள். தூதின் பரிமாணங்கள் மாறினாலும் பிரிவின் வலி மாறாது என்பதை உணர்த்தும் வகையில் “மல்லிப்பூ” பாடலில் வீடியோ கால் வழியாகத் தனது பிரிவின் வலியை வெளிப்படுத்தும் வரிகள் சங்க கால காதலை நினைவிற்குக் கொண்டுவருகிறது.







