வழக்கறிஞர் சிவகுமார் கொல்லப்பட்டதை கண்டித்து சேலம் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நீதிமன்ற பணிகள் முழுமையாக பாதிப்படைந்துள்ளது.
தர்மபுரி வழக்கறிஞர் சிவகுமார் கொல்லப்பட்டதை கண்டித்தும், மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த ராஜேஷ் மற்றும் ஸ்டாலின் ஆகியோரை கீரைத்துறை காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் இரும்பு கம்பியால் தாக்கி பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், இன்று சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் உள்ள சேலம் வழக்கறிஞர்கள் சங்கத்தினரோடு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பினரும் சேர்ந்து ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் இந்த போராட்டத்தில், வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த ராஜேஷ் மற்றும் ஸ்டாலின் வழக்கில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் மீது தமிழக அரசு குற்ற வழக்கு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியும் , வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் தாமதம் இன்றி நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தியும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சேலம் மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்று நீதிமன்றத்திற்கு செல்லாமல் பணிகளை புறக்கணிப்பு செய்துள்ளனர் . இதனால் நீதிமன்ற பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா