தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல் மும்பையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.
பிரபல தொழிலதிபர்களில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். இவரின் மறைவு அவரது குடும்பத்தை மட்டுமின்றி உலக மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் ஒரு தொழில் தலைவராக மட்டுமின்றி, மனிதநேயமிக்க மனிதராகவும் செயல்பட்டவர் ரத்தன் டாடா. தனது வருமானத்தில் பாதியை அறக்கட்டளைகளுக்கு வழங்கியவர். தற்போது இந்த மனிதநேய பண்பாளரின் மறைவுக்கு அவரது உறவினர்கள், குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் கண்ணீர் செலுத்துகின்றனர்.
இயல்பான சுபாவம் , மனித நேய செயற்பாடுகள் , விலங்குகளின் மீதான பிரியம் என அவரது பல்வேறு குணங்கள் மக்கள் வியந்து பார்க்கப்படுபவை. சொந்தமாக தொழில் தொடங்கி முன்னேற நினைக்கும் ஒவ்வொரு இளைஞருக்கு ரத்தன் டாடா முன்னுதாரணமாக இருந்து வருகிறார். இனிமேலும் இருப்பார். ரத்தன் டாடாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவருடைய உடல் மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு உள்ளது. ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்தன் டாடாவின் உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் நேரில் சென்று ரத்தன் டாடாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். ரத்தன் டாடாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். இன்று மாலை 3.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.







