ஆதார் எண்ணை இணைத்தால்தான் விவசாயிகளுக்கு கடைசி தவணை உதவித் தொகை-மத்திய அரசு

ஆண்டுக்கு மூன்று தவணைகளில் தலா ரூ.2000 ஐ விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. கடைசி தவணைப் பணத்தை பெறுவதற்கு ஆதார் எண்ணை சம்பந்தப்பட்ட வலைத்தளத்தில் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.…

ஆண்டுக்கு மூன்று தவணைகளில் தலா ரூ.2000 ஐ விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. கடைசி தவணைப் பணத்தை பெறுவதற்கு ஆதார் எண்ணை சம்பந்தப்பட்ட வலைத்தளத்தில் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் “பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி’’ திட்டமானது மத்திய அரசின் 100% பங்களிப்புடன் பிப்ரவரி 2019-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2,000/- வீதம் ஆண்டிற்கு ரூபாய் 6,000/- மூன்று தவணைகளில், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப் பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை, 38.24 இலட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 11 தவணைகளாக நேரடி மானியமாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மத்திய அரசு 12-வது தவணைத் தொகை விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள்ளது.

அதன்படி ஆகஸ்ட் மாதம் முதல் விடுவிக்கப்படும் அனைத்து தவணைத் தொகைகளும் பயனாளியின் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

எனவே, அனைத்து பி.எம்.கிசான் திட்டப் பயனாளிகள் அனைவரும் http://www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசிக்கு வரும் ஓ.டி.பி. பெற்று அதைப் பதிவு செய்து ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள பொது சேவை மையங்களில் தங்கள் விரல் ரேகையைப் பதிவு செய்தும் பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.

அடுத்த 12 வது தவணைத் தொகையானது பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே தவணைத் தொகை விடுவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே, இதுவரை பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யாத பயனாளிகள் அனைவரும் கட்டாயமாக ஆதார் எண்ணை பி.எம்.கிசான் வலைதளத்தில் புதுப்பித்து தொடர்ந்து பயனடையுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.