இலங்கையில் அதிகாரமற்ற பொம்மை அதிபராலும், அமைச்சர்களாலும் மக்கள் பிரச்னைகளை தீர்த்துவிட முடியுமா என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பி உள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்து வரும் இலங்கையில், மக்கள் தன்னெழுச்சியாகப் போராடத் தொடங்கினர். இதன் காரணமாக அந்நாட்டு பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகினர். கோத்தபய ராஜபக்சே உயிருக்கு பயந்து நாட்டை விட்டே வெளியேறினார். மாலத்தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து என்று பலமாதங்கள் வெளிநாடுகளில் இருந்துவிட்டு மீண்டும் இலங்கை திரும்பி இருக்கிறார். அவரை, தற்போதைய அதிபராக இருக்கும் ரணில் விக்ரம சிங்கே நேரில் சென்று சந்தித்தது சர்ச்சையாகி இருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை கடுமையாக விமர்சித்துள்ள இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யாத அரசாங்கம், புதிய அமைச்சர்களை மட்டும் நியமித்துள்ளது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதை விட்டுவிட்டு, மக்கள் போராட்டங்களை ஒடுக்க அரசு முனைந்திருப்பதாகவும், பயங்கரவாத தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு அடக்குமுறை சட்டங்களை பயன்படுத்தி போராட்டகாரர்களை ஒடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
_வெற்றிநிலா