மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன் மேற்கு வங்க ஆளுநராக இன்று கூடுதல் பொறுப்பேற்றார்.
மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கர், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் தொடர்ச்சியாக மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பு மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன் வசம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
மேற்கு வங்க ஆளுநராக அறிவிக்கப்பட்ட இல. கணேசன் கொல்கத்தாவில் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநில அமைச்சர்கள், சபாநாயகர் பீமன் பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேற்கு வங்க ஆளுநராக இல. கணேசன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு பூங்கொத்து கொடுத்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்தார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் முந்தைய ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் இடையே தொடர்ந்து மோதல்போக்கு இருந்து வந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இல. கணேசன், மேற்கு வங்கத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.
அவருக்கும் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு இருக்குமா இருக்காதா என்ற கேள்வி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.









