கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு
மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. கடலில் தத்தளித்த
19 மீனவர்களை மற்றொரு விசைப்படகில் சக மீனவர்கள் மீட்டனர். எனினும், படகு மூழ்கியது.
கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் பகுதியை சேர்ந்தவர் கில்பர்ட் இவருக்கு
சொந்தமான “விண்ணேற்பு மாதா” என்ற விசைப்படகில் முட்டம் மீன்பிடி துறைமுகத்தில்
இருந்து ஓட்டுனர் மதன் தலைமையில் கடந்த 22-ம் தேதி குமரி மாவட்ட மீனவர்கள்
12 பேர் மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் 7 பேர் என 19 பேர் ஆழ்கடல்
மீன்பிடி தொழிலுக்கு சென்றனர்.
விசைப்படகானது 40 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு
கொண்டிருக்கும்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. சேதமடைந்த படகு மெல்ல மெல்ல கடலில் முழ்க தொடங்கிய நிலையில் விசைப்படகில் இருந்த 19 மீனவர்களும் விசைப்படகில் புகுந்த கடல் தண்ணீரில் தத்தளித்தப்படி இருந்தனர்.

இந்த நிலையில், அந்த வழியாக சென்ற “நிகாஷ்” என்ற விசைப்படகில் இருந்த மீனவர்கள்
கடலில் விசைப்படகு மூழ்கி மீனவர்கள் தத்தளித்து கொண்டிருப்பதை கண்டு உடனடியாக
அந்த படகில் இருந்து மீனவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட மீனவர்களை தங்கள் படகு மூலம் முட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு
வருவதாக குளச்சல் கடல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் 19 மீனவர்களும் மீட்கப்பட்ட நிலையில் படகு மூழ்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.







