ஹிமாச்சலப்பிரதேசம் குலு அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
ஹிமாச்சலப்பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள சைஞ் பள்ளத்தாக்கில் 20 பேருடன் பயணித்த பேருந்து, ஜங்லா என்ற இடத்தில் இன்று காலை விபத்துக்குள்ளானது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மீட்புப் படையினருடன் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதில், 6 குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
இந்த சோக சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஆழ்ந்த வேதனை தெரிவித்தனர்.
ராம்நாத் கோவிந்த் விடுத்த பதிவில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி விடுத்த பதிவில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.












