கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஆறு அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் 2 அணு உலைகள் மூலம் தற்போது மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 3 மற்றும் 4வது அணு உலை கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைக்க முதல்கட்ட பணிகள் கடந்த மாதம் தொடங்கி நடந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தமிழக சபாநாயகர் அப்பாவு கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் தனியார் பங்களிப்புடன் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை திறந்து வைத்தார். பின்பு செட்டிகுளம் அனுவிஜய் நகரத்தில் அணுமின் நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் கூடங்குளம் வளாக இயக்குனர் ராஜ் மனோகர் காட்போலே, நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதன் பின்பு சபாநாயகர் அப்பாவு பேசும்போது, கூடங்குளம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உள்ளூர் மக்களுக்கும் இடம் கொடுத்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான். சுமார் 20, ஆயிரம் பேர் பணிபுரியும் இடத்தில் மிகவும் குறைவானவர்களே இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். இந்த நிலையை போக்குவதற்காக இப்பகுதியில் படித்த இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தோம். அதன்பேரில் ஐடிஐ, பாலிடெக்னிக் படித்தவர்களுக்கு மூன்று மாத கால பயிற்சி அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு அமைப்பதற்கும், கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி பகுதியிலிருந்து தண்ணீரை பம்ப் செய்து ராதாபுரம் கால்வாய் கொண்டு ஒரு திட்டத்தையும் செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.