கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சரியான திசையை நோக்கி விசாரணை நடைபெற்று கொண்டு இருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கலை அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, திருமயம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலை அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார் என்றார். ஏழை மாணவ மாணவிகள் கல்லூரியில் படிப்பதற்கு அரசு கலை அறிவியல் கல்லூரிகள் ஏதுவாக இருக்கிறது என கூறினார்.
அரசு கலை அறிவியல் கல்லூரி மூலமாகத்தான் அதிக பட்டதாரிகள் வர முடியும். தனியார் கல்லூரியில் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதால் அவர்கள் அரசு கல்லூரியில் படிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோரிக்கையின் அடிப்படையில் தற்போது அரசு கலை அறிவியல் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதல் முறையாக ஒரே நேரத்தில் 20 அரசு கலை அறிவியல் கல்லூரி திறக்கப்பட்டு இருப்பது ஒரு வரலாற்று சாதனை என கூறிய அவர், இந்த ஓராண்டில் மட்டும் 31 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சரியான திசை நோக்கி விசாரணை நடைபெற்று கொண்டு இருக்கிறது என்றார். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதால் அதில் காலதாமதம் என்று குறை கூற முடியாது. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதைப்பற்றி எந்த விமர்சனமும் சொல்ல முடியாது ஆனால் வழக்கு சரியான திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என கூறினார்.
– இரா.நம்பிராஜன்