இந்திய அணியின் கே.எல்.ராகுல் முழு உடற்தகுதியுடன் உள்ளதாக ஐசிசி சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் அவர் 15 பேர் அடங்கிய உலகக் கோப்பைக்கான உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்திய முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான கே.எல்.ராகுல், பெங்களூர் அணிக்கு எதிராக மே 1-ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் காயம் அடைந்தார். ஃபீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக கே.எல்.ராகுல் நீண்ட நாள்கள் அணியில் இடம் பிடிக்காமல் இருந்தார். பின்னர் அறுவை சிகிச்சையை தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிகெட் அகாடெமியில் அவர் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
காயத்திலிருந்து குணமடைந்த அவர் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால், முதல் இரண்டு போட்டிகளில் இருந்து அவர் விலகினார். இந்த நிலையில், இந்திய அணியின் கே.எல்.ராகுல் முழு உடற்தகுதியுடன் உள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடெமி சான்றிதழ் வழங்கியது. இதனால் அவர் 15 பேர் அடங்கிய உலகக் கோப்பைக்கான உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளார்.
மேலும் உலகக் கோப்பைக்கான இந்திய அணி நாளை மறுநாள் (செப்டம்பர் 5) அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தேர்வுக் குழுவினர் ராகுலின் உடற்தகுதி குறித்து தெரிந்து கொண்டு அணி வீரர்கள் விவரங்களை அறிவிக்கலாம் என முடிவு செய்திருந்தனர். தற்போது, கே.எல்.ராகுல் முழுவதும் குணமடைந்துள்ளதால் அவர் அணியில் இடம் பிடிப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அணியில் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்துக்கு இஷான் கிஷன் உள்ளார். இதனால், சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைப்பதற்கு சிக்கல் எழுந்துள்ளது. மேலும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.







