தனியார் லாரி பார்க்கிங்கில் ஏற்பட்ட தகராறில் வடமாநில லாரி ஓட்டுநர் லாரி வைத்து மோதியதில் சென்னை செங்குன்றத்தை சேர்ந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் தனியார் லாரி பார்க்கிங் இடம் உள்ளது. இங்கு வடபெரும்பாக்கம் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கமலகண்ணன் (வயது 36) அதே பகுதியைச் சேர்ந்த நவீன் (வயது 36) வடகரை பகுதியைச் சேர்ந்த குமரன் (வயது 34) மற்றும் சிலர், நேற்று இரவு அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, இவர்களுக்கும் வடமாநில லாரி டிரைவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இடையே தகராறு முற்றியதும், வடமாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் தனது லாரியை பின்னோக்கி இயக்கியுள்ளார். இதனால் லாரி பின்னால் நின்று கொண்டிருந்த கமலகண்ணன், நவீன் மற்றும் குமரன் மீது லாரி மோதியுள்ளது.
இதில் கமலகண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குமரன் மற்றும் நவீன் பலத்த காயமடைந்த நிலையிலை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி குமரனும் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் செங்குன்றம் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்வம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வடமாநில லாரி ஓட்டுநர் கண்ணையா லால் சிங் மற்றும் அவரின் உதவியாளர் கிரீஷ்குமார் ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, அப்பகுதி மக்கள் லாரி யார்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வடமாநிலத்தவர்களின் லாரிகளின் கண்ணாடிகளை அடித்து உடைத்து நொறுக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.